சங்கீதம் 99
யெகோவா ஆட்சி செய்கிறார்,
நாடுகள் நடுங்கட்டும்;
அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;
பூமி அதிரட்டும்.
சீயோனிலே யெகோவா பெரியவர்;
அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்;
அவர் பரிசுத்தமானவர்.
 
அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்;
நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்;
நீர் யாக்கோபில்
நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.
நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி,
அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்;
அவர் பரிசுத்தமானவர்.
 
அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்;
அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்;
அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.
அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
அவர் அவர்களுக்குக் கொடுத்த
அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.
 
எங்கள் இறைவனாகிய யெகோவாவே,
நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்;
இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும்,
நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.
நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி
அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்;
ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.