சங்கீதம் 98
சங்கீதம்.
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்;
அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமுமே
இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறது.
யெகோவா தமது இரட்சிப்பைத் தெரியப்படுத்தி,
தமது நீதியைப் பிறநாடுகளின் கண்முன்னே வெளிப்படுத்தினார்.
அவர் இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் கொண்டிருந்த
தமது அன்பையும் உண்மையையும் நினைவில்கொண்டார்;
பூமியின் எல்லைகள் எல்லாம்
நமது இறைவனுடைய இரட்சிப்பைக் கண்டன.
 
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும்
யெகோவாவை மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்;
முழக்கமிட்டு களிப்புடன் இசையோடு பாடுங்கள்.
யாழோடு யெகோவாவுக்கு இசை பாடுங்கள்;
யாழோடும், கீதசத்தத்தோடும்,
எக்காளங்களோடும், கொம்பு வாத்திய முழக்கங்களோடும்
யெகோவாவாகிய அரசரின்முன் மகிழ்ந்து பாடுங்கள்.
 
கடலும் அதிலுள்ள அனைத்தும்,
உலகமும் அதிலுள்ள அனைவரும் ஆர்ப்பரிப்பார்களாக.
ஆறுகள் தங்கள் கைகளைத் தட்டட்டும்;
மலைகள் மகிழ்ச்சியுடன் ஒன்றுசேர்ந்து பாடட்டும்.
அவை யெகோவாவுக்கு முன்பாகப் பாடட்டும்;
ஏனெனில், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;
அவர் உலகத்தை நீதியுடனும்,
நாடுகளை நேர்மையுடனும் நியாயந்தீர்ப்பார்.