சங்கீதம் 97
யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்;
தொலைவில் உள்ள தீவுகள் மகிழட்டும்.
மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன;
நேர்மையுடனும் நீதியுடனும் அவர் ஆளுகை செய்கிறார்.
நெருப்பு அவருக்கு முன்சென்று,
சுற்றிலுமுள்ள அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கின்றது.
அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது;
பூமி அதைக்கண்டு நடுங்குகிறது.
யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே
மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது;
எல்லா நாடுகளும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
 
உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும்,
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்கள்;
தெய்வங்களே, நீங்களெல்லோரும் யெகோவாவையே வழிபடுங்கள்.
 
யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால்
சீயோன் கேட்டுக் களிகூருகிறது;
யூதாவின் கிராமங்களும் மகிழ்கின்றன.
யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்;
எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாக நீரே உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
10 யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்;
ஏனெனில் அவர் தமக்கு உண்மையுள்ளோரின் உயிர்களைக் காப்பாற்றி,
கொடியவர்களின் கைகளிலிருந்து அவர்களை விடுவிக்கிறார்.
11 நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது,
இருதயத்தில் நீதி உள்ளவர்களுக்குக் களிப்புண்டாகிறது.
12 நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள்,
அவருடைய பரிசுத்தத்தை நினைத்துத் துதியுங்கள்.