சங்கீதம் 9
“மகனின் மரணம்” என்ற இராகத்தில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்;
உமது அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்;
மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன்.
 
என் பகைவர் திரும்பி ஓடுகிறார்கள்;
அவர்கள் உமக்கு முன்பாக இடறிவிழுந்து அழிந்துபோகிறார்கள்.
நீர் எனக்கு ஆதரவாய் நியாயம் செய்து,
நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்.
நீர் நாடுகளைக் கண்டித்து, கொடியவர்களை ஒழித்துவிட்டீர்;
அவர்களுடைய பெயரை என்றென்றுமாய் அழித்து விட்டீர்.
முடிவற்ற அழிவு என் பகைவர்களை மேற்கொண்டு,
நீர் அவர்களுடைய பட்டணங்களை முற்றிலும் அழித்துப்போட்டீர்;
அவை பற்றிய ஞாபகமும் ஒழிந்துபோயிற்று.
 
யெகோவாவோ என்றென்றும் அரசாளுகிறார்;
நியாயந்தீர்க்கும்படியாக தமது சிங்காசனத்தை அவர் நிலைநிறுத்தியிருக்கிறார்.
அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார்,
எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார்.
ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்;
இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர்.
10 உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்;
ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை.
 
11 சீயோனில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் யெகோவாவைத் துதித்துப் பாடி,
அவர் செய்தவற்றை நாடுகளுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
12 ஏனெனில் இரத்தம் சிந்துகிறவர்களுக்கு அவர் பதிற்செய்ய மறப்பதில்லை;
அவர் துன்புற்றவர்களின் கதறுதலை அசட்டை செய்வதில்லை.
 
13 யெகோவாவே, என் பகைவரால் எனக்குவரும் துன்பத்தைப் பாரும்!
என்மேல் இரக்கங்கொண்டு, மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடும்.
14 அப்பொழுது நான் சீயோனின் வாசல்களில்
உமது துதிகளைப் பிரசித்தப்படுத்தி,
அங்கே உமது இரட்சிப்பில் களிகூருவேன்.
 
15 நாடுகள் தாங்கள் தோண்டிய குழிகளுக்குள்ளேயே விழுந்து விட்டார்கள்;
அவர்கள் மறைத்துவைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டன.
16 யெகோவா தமது நீதியினால் அறியப்படுகிறார்;
கொடியவர்கள் தங்கள் கைகளின் செயலினாலேயே சிக்கியிருக்கிறார்கள்.
17 கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும்
பாதாளத்திற்கே திரும்புவார்கள்.
18 ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்;
துன்புறுத்தப்பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் அழிவதில்லை.
 
19 யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்;
நாடுகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படட்டும்.
20 யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்;
தாங்கள் மனிதர் மட்டுமே என்பதை நாடுகள் அறிந்துகொள்ளட்டும்.