சங்கீதம் 8
கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது!
 
நீர் வானங்களுக்கு மேலாக
உமது மகிமையை வைத்திருக்கிறீர்.
உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க,
உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின்
உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக
வல்லமையை உறுதிப்படுத்தினீர்.
உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும்
அவற்றில் நீர் பதித்து வைத்த
சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி
நான் சிந்திக்கும்போது,
மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும்,
மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?*
 
நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து,
அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்;
அனைத்தையும்:
எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும்
காட்டு மிருகங்களையும்
ஆகாயத்துப் பறவைகளையும்
கடல் மீன்களையும்
கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.
 
எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!
* சங்கீதம் 8:4 8:4 எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்? சங்கீதம் 8:5 8:5 அவர்களை அல்லது அவனை