சங்கீதம் 10
யெகோவாவே, நீர் ஏன் தூரத்தில் நிற்கிறீர்?
துன்ப நேரங்களில் நீர் ஏன் மறைந்துகொள்கிறீர்?
 
கொடுமையானவன் பெருமையினால் பலவீனமானவர்களை வேட்டையாடுகிறான்;
அவன் தீட்டுகிற சதித்திட்டங்களில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
அவன் தன் இருதயத்தின் பேராசைகளைக் குறித்துப் பெருமைகொள்கிறான்;
அவன் பேராசைக்காரரை வாழ்த்தி யெகோவாவை நிந்திக்கிறான்.
கொடுமையானவன் தன் பெருமையின் நிமித்தம் இறைவனைத் தேடுவதில்லை;
அவனுடைய சிந்தனைகளிலெல்லாம் அவருக்கு இடமேயில்லை.
அவனுடைய வழிகள் எப்பொழுதுமே செழிப்பாயிருக்கின்றன;
உமது நீதிநெறிகளை அவன் ஒதுக்கி வைத்துள்ளான்;
தன் பகைவர் அனைவரையும் ஏளனம் செய்கிறான்.
அவன் தனக்குள்ளே, “என்னை ஒன்றும் அசைக்கப்படுவதில்லை,
எனக்குத் தலைமுறை தலைமுறைதோறும் கஷ்டம் வராது” என்று சொல்லிக்கொள்கிறான்.
 
அவனுடைய வாய் சாபமும் பொய்யும் கொடுமையும் நிறைந்தது;
அவனுடைய நாவின்கீழே பிரச்சனையும் தீமையும் இருக்கின்றன.
அவன் கிராமங்களின் அருகே பதுங்கிக் காத்திருக்கிறான்;
பதுங்கியிருந்து குற்றமற்றவனைக் கொலைசெய்கிறான்.
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே கண்ணோக்கமாயிருந்து,
பதுங்கியிருக்கும் சிங்கத்தைப்போல் காத்திருக்கிறான்.
அவன் ஆதரவற்றோரைப் பிடிப்பதற்காக காத்திருக்கிறான்;
அவன் உதவியற்றோரைப் பிடித்து தன் வலையில் இழுத்துக்கொள்கிறான்.
10 அவனிடம் அகப்பட்டவர்கள் நசுக்கப்பட்டு நிலைகுலைந்து போகிறார்கள்;
அவனுடைய பெலத்தினால் அவர்கள் வீழ்ந்துபோகிறார்கள்.
11 “இறைவன் கண்டுகொள்ளமாட்டார்;
அவர் தமது முகத்தை மறைத்து, ஒருபோதும் அதைக் காண்பதில்லை”
என்று கொடுமையானவன் தனக்குள் சொல்லிக்கொள்கிறான்.
 
12 யெகோவாவே, எழுந்தருளும்; இறைவனே, உமது கரத்தை உயர்த்தும்;
ஆதரவற்றோரை மறவாதிரும்.
13 கொடுமையானவன் இறைவனை நிந்திப்பது ஏன்?
“அவர் என்னிடம் கணக்குக் கேட்பதில்லை” என்று
அவன் தனக்குள்ளேயே சொல்லிக்கொள்வது ஏன்?
14 ஆனாலும் இறைவனே, நீரோ பாதிக்கப்பட்டோரின் பிரச்சனையைக் காண்கிறீர்;
நீர் அவர்களின் துயரங்களைக் கவனித்து,
அவர்களுக்கு உதவிசெய்யக் கருத்தாய் இருக்கிறீர்.
பாதிக்கப்பட்டோர்கள் தம்மை உம்மிடம் ஒப்படைக்கிறார்கள்;
திக்கற்றவர்களுக்கு நீரே துணையாய் இருக்கிறீர்.
15 கொடுமையுள்ள மனிதனின் கரங்களை முறியும்.
தீயவனுடைய கொடுமையைக் குறித்து அவனிடம் கணக்குக் கேளும்.
இல்லையெனில் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
 
16 யெகோவா என்றென்றைக்கும் அரசராயிருக்கிறார்;
அவருடைய நாட்டிலிருந்து பிற மக்கள் அழிந்துபோவார்கள்.
17 யெகோவாவே, நீர் துன்பப்பட்டோரின் வாஞ்சையைக் கேட்கிறீர்;
அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கதறுதலைக் கேட்கிறார்.
18 பூமிக்குரிய மனிதன் இனி ஒருபோதும்
மற்றவர்களுக்கு திகிலூட்டுபவனாய் இராதபடி,
நீர் திக்கற்றவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கிறீர்.