சங்கீதம் 11
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன்.
அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்:
“ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.
பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்;
நேர்மையான இருதயம் உள்ளவர்மேல்
இருளிலிருந்து எய்வதற்காக
தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.
அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது,
நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?”
 
யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;
யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்;
அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.
யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்;
வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ,
அவர் மனதார வெறுக்கிறார்.
அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும்,
எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்;
வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.
 
யெகோவா நீதியுள்ளவர்,
அவர் நீதியை நேசிக்கிறார்;
நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.