சங்கீதம் 63
தாவீதின் சங்கீதம். யூதாவின் வனாந்திரத்திலிருக்கும்போது பாடியது.
இறைவனே, நீரே என் இறைவன்,
நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்;
தண்ணீரில்லாமல் வறண்டதும்,
காய்ந்ததுமான நிலத்திலே
என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,
என் உடலோ உமக்காக ஏங்குகிறது.
 
பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்;
உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டறிந்தேன்.
உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது;
ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும்.
நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்;
ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன்.
அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்;
என் வாய் களிப்புள்ள உதடுகளினால் பாடி, உம்மைத் துதிக்கும்.
 
என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்;
இராக்காலங்களில் உம்மை தியானம் செய்கிறேன்.
நீரே என் உதவியாயிருப்பதால்,
உமது சிறகுகளின் நிழலிலே நான் மகிழ்ச்சியுடன் பாடுவேன்.
நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்;
உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
 
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள்
பூமியின் ஆழங்களில் இறங்குவார்கள்.
10 அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்;
நரிகளுக்கு இரையாவார்கள்.
 
11 ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்;
இறைவனுடைய பெயரில் சத்தியம்பண்ணுகிற யாவரும் அவரில் மேன்மைபாராட்டுவார்கள்;
பொய்யர்களுடைய வாய்களோ மூடப்படும்.