சங்கீதம் 64
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்;
பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
 
கொடியவர்களின் சதியிலிருந்தும்,
ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.
அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்;
தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள்.
அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்;
அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள்.
 
தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்;
தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்;
“நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள்.
அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து,
“நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள்.
நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை.
 
ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்;
உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள்.
இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி,
அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்;
அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள்.
எல்லா மனிதரும் பயப்படுவார்கள்;
இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து,
அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள்.
 
10 நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து,
அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்;
இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்!