சங்கீதம் 62
எதுத்தூன் என்னும் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது;
என் இரட்சிப்பு அவரால் வருகிறது.
அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்;
நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்.
 
எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்?
நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா?
நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன்.
என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு
அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள்,
அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்;
அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள்,
ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள்.
 
ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;
என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.
அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும்
என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன்.
என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது;
இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார்.
மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;
உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்;
இறைவனே நமது புகலிடம்.
 
கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே,
உயர்குடி மனிதர் வெறும் பொய்யே;
தராசில் நிறுக்கப்பட்டால் அவர்கள் ஒன்றுமில்லை;
அவர்கள் சுவாசத்திலும் லேசானவர்கள்.
10 பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே;
களவாடிய பொருட்களைக் குறித்துப் பெருமைகொள்ளாதே;
உனது செல்வங்கள் அதிகரித்தாலும்,
உன் இருதயத்தை அவைகளின்மேல் வைக்காதே.
 
11 இறைவன் ஒருமுறை பேசினார்,
நான் இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்:
“இறைவனே, வல்லமை உமக்கே உரியது,
12 ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”;
நிச்சயமாகவே, “நீர் ஒவ்வொருவருக்கும்
அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்.”