சங்கீதம் 61
கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
என் இறைவனே, என் கதறுதலைக் கேளும்,
என் மன்றாட்டுக்குச் செவிகொடும்.
 
பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்;
என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.
நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்;
பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர்.
 
நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்;
உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன்.
இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்;
உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை
நீர் எனக்குத் தந்திருக்கிறீர்.
 
அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்;
அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும்.
இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக;
அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும்
உண்மையையும் நியமித்தருளும்.
 
அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்;
நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.