சங்கீதம் 4
கம்பியிசைக் கருவிகளுடன் பாடப்பட்டு பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
நீதியுள்ள என் இறைவனே,
நான் கூப்பிடும்போது எனக்குப் பதில் தாரும்.
என் துயரத்திலிருந்து எனக்கு ஆறுதலைக் கொடும்;
என்மேல் இரக்கமாயிருந்து என் ஜெபத்தைக் கேளும்.
 
மனிதர்களே, எவ்வளவு காலத்திற்கு என் மகிமையை வெட்கமாக மாற்றுவீர்கள்?
எவ்வளவு காலத்திற்கு வெறுமையானவைகளை விரும்பி, பொய்யான தெய்வங்களைத் தேடுவீர்கள்?
யெகோவா பக்தியுள்ளவர்களைத் தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;
நான் யெகோவாவைக் கூப்பிடும்போது அவர் செவிகொடுப்பார்.
 
நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்;
நீங்கள் உங்கள் படுக்கையில் இருக்கும்போது,
உங்கள் இருதயங்களை ஆராய்ந்து அமைதியாயிருங்கள்.
நீதியான பலிகளைச் செலுத்தி,
யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்.
 
“எங்களுக்கு நன்மையைக் காட்டுகிறவன் யார்?” என்று அநேகர் கேட்கிறார்கள்;
யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளி எங்கள்மேல் பிரகாசிக்கட்டும்.
தானியமும் புதுத் திராட்சை இரசமும்
நிறைந்திருக்கிற காலத்தின் மகிழ்ச்சியைவிட
அதிக மகிழ்ச்சியினால் நீர் என் இருதயத்தை நிரப்பியிருக்கிறீர்.
 
நான் படுத்து மன அமைதியுடன் உறங்குவேன்;
ஏனெனில் யெகோவாவே,
நீர் மட்டுமே என்னைப் பாதுகாப்பாகக் குடியிருக்கச் செய்கிறீர்.