சங்கீதம் 5
புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்,
என் பெருமூச்சைக் கவனியும்.
உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும்,
என் அரசனே, என் இறைவனே,
உம்மிடமே நான் வேண்டுகிறேன்.
 
யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்;
நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து,
எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.
நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல;
தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது.
திமிர் பிடித்தவர்கள்
உமது சமுகத்தில் நிற்கமுடியாது;
அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர்.
பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்;
இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும்
யெகோவா அருவருக்கிறார்.
ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே
உமது வீட்டிற்கு வந்து,
உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி
பயபக்தியுடன் வணங்குவேன்.
 
யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம்
உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்;
உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும்.
அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது;
அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது;
அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி;
அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.
10 இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்;
அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும்.
அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்;
ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள்.
11 ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்;
அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்;
உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி,
அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும்.
 
12 யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்;
ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.