சங்கீதம் 3
தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம்.
யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்!
எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.
அநேகர் என்னைக்குறித்து,
“இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்” என்று சொல்கிறார்கள்.*
 
ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும்,
என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர்.
நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்;
அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.
 
நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்;
யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன்.
எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும்,
நான் பயப்படமாட்டேன்.
 
யெகோவாவே, எழுந்தருளும்;
என் இறைவனே, என்னை விடுவியும்.
என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து,
கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.
 
யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது.
உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.
* சங்கீதம் 3:2 3:2 எபிரெய மொழிப் பிரதிகளில் சேலா என்ற வார்த்தை இங்கும் 4 மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது.