சங்கீதம் 38
நினைவுகூருதலுக்கான விண்ணப்பமாகிய தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்;
உமது கடுங்கோபத்தினால் என்னைத் தண்டியாதேயும்.
உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன;
உமது கரமோ என்மேல் பாரமாயிருக்கிறது.
உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை;
என் பாவத்தினால் என் எலும்புகளில் சுகமில்லை.
நான் தாங்கமுடியாத சுமையைப்போல
என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் கடந்துபோயிற்று.
 
என் மதிகேட்டினால்
எனக்கு ஏற்பட்ட புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.
நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்;
நாளெல்லாம் நான் துக்கத்தோடு திரிகிறேன்.
எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது;
என் உடலில் சுகமே இல்லை.
நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்;
உள்ளத்தின் வேதனையால் நான் கதறுகிறேன்.
 
யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;
என் பெருமூச்சும் உமக்கு மறைவாயில்லை.
10 என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது;
என் கண்களும்கூட ஒளியிழந்து மங்கிப்போயிற்று.
11 எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம்,
என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள்.
என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.
12 என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;
எனக்குத் தீமைசெய்யத் தேடுகிறவர்கள் என் அழிவைக் குறித்துப் பேசுகிறார்கள்;
நாளெல்லாம் வஞ்சனையாய் சூழ்ச்சி செய்கிறார்கள்.
 
13 நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,
ஊமையனைப்போல வாய் திறக்காதவனாகவும் இருக்கிறேன்.
14 காது காதுகேட்காதவனும்,
தன்னுடைய வாயினால் பதிலளிக்க முடியாதிருக்கிற மனிதனைப் போலானேன்.
15 யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்;
என் இறைவனாகிய ஆண்டவரே, நீர் எனக்கு பதில் கொடும்.
16 “என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்;
அவர்கள் என்னிமித்தம் ஏளனமாக பெருமைபாராட்ட விடாதேயும்” என்று நான் சொன்னேன்.
 
17 நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்;
என் வேதனை எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
18 என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்;
என் பாவத்தினால் நான் கலங்கியிருக்கிறேன்.
19 காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்;
எதுவுமின்றி என்னை வெறுக்கிறவர்கள் ஏராளமாயிருக்கிறார்கள்.
20 நான் நன்மையானதைச் செய்தபோதும்,
நான் செய்த நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமை செய்பவர்கள்
என்னைக் குற்றப்படுத்துகிறார்கள்.
 
21 யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்;
என் இறைவனே, என்னைவிட்டுத் தூரமாய் இருக்கவேண்டாம்.
22 என் இரட்சகராகிய யெகோவாவே,
எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.