சங்கீதம் 39
பாடகர் குழுத் தலைவனாகிய எதுத்தூனுக்கு ஒப்புவித்த தாவீதின் சங்கீதம்.
நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து,
என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன்.
கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை,
நான் என் வாயை கடிவாளத்தால் பாதுகாப்பேன்.”
நான் பேசாமல் ஊமையாயிருந்தேன்,
நலமானதையும் பேசாமல் இருந்தேன்.
ஆனால் என் வேதனை அதிகரித்தது;
என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது;
நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது;
அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்:
 
“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும்,
என் வாழ்நாளின் எண்ணிக்கையையும் எனக்குத் தெரிவியும்;
என் வாழ்வு இவ்வளவுதான் என்பதை எனக்குத் தெரியப்பண்ணும்.
என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்;
எனது ஆயுட்காலமோ உமக்கு முன்பாக இல்லாததுபோல் தோன்றுகிறது;
பாதுகாப்பாய் இருப்பதுபோல தோன்றும்
எல்லா மனிதரின் நிலையும் கானல்நீரைப் போன்றதே.
 
“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்;
அவன் ஓடியோடி உழைத்து வீணாகவே அவன் செல்வத்தைச் சேர்த்துக் குவித்தாலும்,
அது யாரைப் போய்ச்சேரும் என அவன் அறியான்.
 
“ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?
என் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது.
என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்;
என்னை மூடரின் கேலிப் பொருளாக்காதேயும்.
நான் மவுனமாயிருந்தேன்;
நீரே இதைச் செய்தவராதலால், நான் என் வாயைத் திறக்கமாட்டேன்.
10 உமது வாதையை என்னை விட்டகற்றும்;
உமது கரத்தின் தாக்குதலால் நான் இளைத்துப் போனேன்.
11 பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது,
நீர் அவர்களுடைய செல்வத்தைப் பூச்சி அரிப்பதுபோல் கரைத்துவிடுகிறீர்;
நிச்சயமாகவே எல்லா மனிதரும் கானல்நீரைப் போன்றவர்களே.
 
12 “யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;
உதவிகேட்டு நான் கதறும் கதறுதலுக்குச் செவிகொடும்;
என் அழுகையைக் கேளாமல் இருக்கவேண்டாம்.
என் தந்தையர்கள் எல்லோரையும் போலவே,
நானும் உம்முடன் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனாகவும்,
குடியுரிமை அற்றவனாகவும் குடியிருக்கிறேன்.
13 நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே,
நான் திரும்பவும் மகிழும்படியாய்,
உமது கோபத்தின் பார்வையை என்னைவிட்டு அகற்றும்.”