சங்கீதம் 37
தாவீதின் சங்கீதம்.
தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே;
அநியாயம் செய்பவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்;
பச்சைத் தாவரத்தைப்போல் விரைவில் வாடிப்போவார்கள்.
 
யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்;
நாட்டில் குடியிருந்து, பாதுகாப்பாய் மேய்ச்சலில் மகிழ்ந்திரு.
யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு,
அப்பொழுது அவர் உன் இருதயத்தின் வாஞ்சைகளை உனக்குத் தருவார்.
 
யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி;
அவரில் நம்பிக்கையாயிரு, அப்பொழுது அவர் உனக்காக இவைகளைச் செய்வார்.
அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும்,
உன் நியாயத்தை பட்டப்பகலைப் போலவும் ஒளிரச் செய்வார்.
 
யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து,
அவருக்காகப் பொறுமையுடன் காத்திரு;
மனிதர் தங்கள் வழிகளில் வெற்றி காணும்போதும்
அவர்கள் தங்கள் பொல்லாத திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் நீ பதற்றமடையாதே.
 
கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு;
பதற்றமடையாதே; அது உன்னைத் தீமைக்கு மட்டுமே வழிநடத்தும்.
ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்;
ஆனால் யெகோவாவிடம் எதிர்பார்ப்பாய் இருக்கிறவர்கள்
நாட்டை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
 
10 இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்;
நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள்.
11 ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு,
சமாதானத்தின் செழிப்பை அனுபவிப்பார்கள்.
 
12 கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து,
அவர்களைப் பார்த்து பற்கடிக்கிறார்கள்.
13 ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்;
அவர்களுடைய முடிவுகாலம் வருகிறதென அவர் அறிகிறார்.
 
14 ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும்,
நேர்மையான வழியில் நடப்பவர்களை கொலைசெய்வதற்கும்
கொடியவர்கள் வாளை உருவி
வில்லை வளைக்கிறார்கள்.
15 ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்;
அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும்.
 
16 கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும்,
நீதிமான்களிடம் இருக்கும் சிறிதளவே சிறந்தது.
17 ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்;
நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
 
18 குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்;
அவர்களுடைய உரிமைச்சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
19 அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்;
பஞ்ச காலங்களிலும் நிறைவை அனுபவிப்பார்கள்.
 
20 ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள்,
யெகோவாவின் பகைவர்கள் வயலின் பூவைப்போல் இருந்தாலும்,
அவர்கள் எரிந்து புகையைப்போல் இல்லாது ஒழிவார்கள்.
 
21 கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்;
ஆனால் நீதிமான்கள் தாராள மனதுடன் கொடுக்கிறார்கள்.
22 யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள்
நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்;
அவரால் சபிக்கப்படுகிறவர்களோ அழிந்துபோவார்கள்.
 
23 ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால்,
அவனுடைய காலடிகளை அவர் உறுதியாக்குகிறார்.
24 அவன் இடறினாலும் விழமாட்டான்;
ஏனெனில், யெகோவா தமது கரத்தினால் அவனைத் தாங்கிப் பிடிக்கிறார்.
 
25 நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்;
ஆனால் நீதிமான்கள் கைவிடப்பட்டதையோ,
அவர்களுடைய பிள்ளைகள் உணவுக்காக பிச்சையெடுத்ததையோ நான் ஒருபோதும் காணவில்லை.
26 நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்;
அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
 
27 தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்;
அப்பொழுது நீ என்றென்றும் நிலைத்திருப்பாய்.
28 ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்;
தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவுமாட்டார்.
அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள்.
 
ஆனால் கொடியவர்களின் சந்ததியோ அழிந்துபோம்.
29 நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி,
அதில் என்றும் குடியிருப்பார்கள்.
 
30 நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;
அவர்களுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31 இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது;
அவர்களுடைய கால்கள் சறுக்குவதில்லை.
 
32 நீதிமான்களைக் கொல்லும்படி,
கொடியவர்கள் அவர்களைப் பிடிக்கப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள்.
33 ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை;
நியாய்ந்தீர்க்கப்பட வரும்போது குற்றவாளிகளாக்க இடமளிப்பதுமில்லை.
 
34 யெகோவாவை எதிர்பார்த்திருந்து,
அவருடைய வழியைக் கைக்கொள்.
நீ நாட்டை சொந்தமாக்கிக் கொள்ளும்படி, அவர் உன்னை உயர்த்துவார்;
கொடியவர்கள் அழிந்துபோவார்கள், நீ அதைக் காண்பாய்.
 
35 கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்;
அவன் ஒரு பச்சைமரம் தனக்கேற்ற மண்ணில் செழித்திருப்பதைப் போல வளர்ந்தான்.
36 ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்;
நான் அவனைத் தேடியும்கூட அவனைக் காணவில்லை.
 
37 குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்;
சமாதானமாய் இருக்கிற மனிதனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
38 ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்;
கொடியவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போகும்.
 
39 நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்;
கஷ்டமான காலத்தில் அவரே அவர்களின் அரணாய் இருக்கிறார்.
40 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்;
அவர்கள் யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறபடியால்,
கொடியவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து இரட்சிக்கிறார்.