சங்கீதம் 30
ஆலய பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன்,
ஏனெனில், ஆழங்களிலிருந்து நீர் என்னை வெளியே தூக்கியெடுத்தீர்;
என் பகைவர் என்னைப் பழித்து மகிழ நீர் இடமளிக்கவில்லை.
என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
நீர் என்னை சுகமாக்கினீர்.
யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்;
குழிக்குள் போய்விடாமல் என்னைத் தப்புவித்தீர்.
 
யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்;
அவருடைய பரிசுத்தத்தை நினைத்து நன்றி கூறுங்கள்.
அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
ஆனால் அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்;
இரவிலே அழுகை இருந்தாலும்,
காலையிலோ மகிழ்ச்சி வரும்.
 
நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,
“நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்” என்று சொன்னேன்.
யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,
என்னுடைய மலையை* உறுதியாய் நிற்கப்பண்ணினீர்;
ஆனால் நீர் உமது முகத்தை மறைத்துக்கொண்ட போது,
நான் மனம்சோர்ந்து போனேன்.
 
யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவிடம் நான் இரக்கத்திற்காகக் கதறினேன்.
“நான் அழிந்து
குழிக்குள் போவதால் என்ன பயன்?
தூசி உம்மைத் துதிக்குமோ?
அது உமது உண்மையை பிரசித்தப்படுத்துமோ?
10 யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.
யெகோவாவே, எனக்கு உதவியாயிரும்.”
 
11 என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;
நீர் என்னுடைய துக்கவுடையைக் களைந்துவிட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்துவித்தீர்.
12 ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;
என் இறைவனாகிய யெகோவாவே, என்றென்றைக்கும் நான் உம்மைத் துதிப்பேன்.
* சங்கீதம் 30:7 30:7 அதாவது, சீயோன் மலை