சங்கீதம் 31
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்;
என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்;
உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
உமது செவியை எனக்குச் சாய்த்து,
என்னைத் தப்புவிக்க விரைவாய் வாரும்;
என் புகலிடமான கன்மலையாகவும்,
என்னைக் காப்பாற்றும் பலமான கோட்டையாகவும் இரும்.
நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால்,
உமது பெயரின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி என்னை வழிநடத்தும்.
நீரே என் புகலிடம்,
ஆகையால் எனக்காக வைக்கப்பட்டிருக்கும் கண்ணியிலிருந்து என்னை விடுவியும்.
உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்;
யெகோவாவே, என் உண்மையின் இறைவனே, என்னை மீட்டுக்கொள்ளும்.
 
இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்;
நான் யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருக்கிறேன்.
நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்;
ஏனெனில், நீர் என் வேதனையைக் கண்டு,
என் ஆத்தும துயரத்தை அறிந்திருக்கிறீர்.
நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல்,
விசாலமான இடத்தில் என் பாதங்களை நிறுத்தினீர்.
 
யெகோவாவே, நான் துன்பத்தில் இருப்பதால், என்னில் இரக்கமாயிரும்;
துக்கத்தினால் என் கண்கள் பலவீனமடைகின்றன;
துயரத்தினால் என் ஆத்துமாவும் உடலும் பெலனில்லாமல் போகின்றன.
10 என் வாழ்க்கை வேதனையிலேயே கழிந்துபோயிற்று;
அழுது புலம்பியே என் வருடங்களும் கடந்துபோயிற்று.
என் துன்பத்தினால்* என் பெலம் குன்றி,
என் எலும்புகளும் பெலனற்றுப் போகின்றன.
11 என் பகைவர்கள் அனைவரின் நிமித்தம்
நான் என் அயலாருக்கு நிந்தையாகிறேன்;
என் நண்பர்களுக்கு நான் பயங்கரமானேன்;
தெருவில் என்னைக் காண்பவர்கள் என்னைவிட்டு விலகி ஓடிப்போனார்கள்.
12 நான் இறந்துவிட்ட ஒருவனைப் போல, அவர்கள் என்னை மறந்துபோனார்கள்;
நான் ஓர் உடைந்த பாத்திரத்தைப் போலானேன்.
13 அநேகர் என்னை அவதூறாய்ப் பேசுகிறதைக் கேட்கிறேன்,
“எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது!”
அவர்கள் எனக்கு விரோதமாக சூழ்ச்சிசெய்து,
என் உயிரை வாங்க சதித்திட்டம் போடுகிறார்கள்.
 
14 ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்;
“நீரே என் இறைவன்” என்று நான் சொன்னேன்.
15 என் நாட்கள் உமது கரங்களில் இருக்கிறது;
என் பகைவரிடமிருந்தும்
என்னைத் துரத்துகிறவரிடமிருந்தும் விடுவியும்.
16 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்;
உமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைக் காப்பாற்றும்.
17 யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்;
நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
கொடியவர்கள் வெட்கப்பட்டு பாதாளத்தில்
மவுனமாய்க் கிடக்கட்டும்.
18 பெருமையோடும் அகந்தையோடும்,
நீதிமான்களுக்கு விரோதமாய்ப் பேசும்
அவர்களுடைய பொய் உதடுகள் ஊமையாகட்டும்.
 
19 உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக
நீர் குவித்து வைத்திருக்கும் நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன;
உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறவர்கள்மேல்,
மனிதர் காணும்படியாக நீர் பொழிகின்ற நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன.
20 நீர் அவர்களை மனிதரின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கி,
உமது சமுகத்தின் அடைக்கலத்தில் மறைத்துவைக்கிறீர்;
அவர்களைக் குற்றப்படுத்தும் நாவுகளுக்கு விலக்கி,
உமது தங்குமிடத்தில் அவர்களை ஒளித்துவைக்கிறீர்.
 
21 யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,
ஏனெனில் பட்டணம் முற்றுகையிடப்பட்டு நான் சிக்கலில் இருந்தபோது,
அவர் தமது உடன்படிக்கை அன்பின் அதிசயத்தை எனக்குக் காண்பித்தார்.
22 நான் அதிர்ச்சியடைந்து,
“உமது பார்வையிலிருந்து அகற்றப்பட்டேன்” என்று சொன்னேன்;
ஆனாலும் நான் உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது,
இரக்கத்திற்காக நான் கதறி அழுததை நீர் கேட்டீர்.
 
23 யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, அவரில் அன்புகூருங்கள்!
யெகோவா அவருக்கு உண்மையாய் இருப்பவர்களைப் பாதுகாக்கிறார்;
ஆனால் பெருமையுள்ளவர்களுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
24 யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே,
நீங்கள் எல்லோரும் பெலன்கொண்டு தைரியமாய் இருங்கள்.
* சங்கீதம் 31:10 31:10 துன்பத்தினால் அல்லது குற்றம்