சங்கீதம் 15
தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்?
உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்?
 
குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள்,
நீதியானதைச் செய்கிறவர்கள்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்;
தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள்,
தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள்,
மற்றவர்களை நிந்திக்காதவர்கள்;
இழிவானவனை அவமதிப்பவர்கள்,
யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்;
ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும்
மனதை மாற்றாதவர்கள்;
ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள்,
குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள்.
 
இவ்வாறு வாழ்கிறவர்கள்
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.