சங்கீதம் 143
தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்,
இரக்கத்திற்கான என் கதறுதலுக்குச் செவிகொடும்;
உமது உண்மையின்படியும்
நீதியின்படியும் எனக்கு பதில் தாரும்.
உமது அடியானை நியாயந்தீர்க்காதேயும்.
வாழ்கின்ற ஒருவருமே உமக்கு முன்பாக நீதிமான்கள் இல்லையே.
பகைவன் என்னைப் பின்தொடர்கிறான்,
அவன் என்னை தரையில் போட்டு தாக்குகிறான்;
வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்களைப்போல்,
அவன் என்னை இருளில் குடியிருக்கப்பண்ணுகிறான்.
ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது;
பயத்தால் என் இருதயம் கலங்குகிறது.
நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்;
உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்;
உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்;
வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
 
யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்;
என் உள்ளம் சோர்ந்துபோகிறது;
உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால்,
நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன்.
காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும்,
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்;
நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்,
ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன்.
யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்;
ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன்.
10 நீரே என் இறைவன்;
ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்;
உமது நல்ல ஆவியானவர்
என்னை நல்வழியில் நடத்துவாராக.
 
11 யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;
உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.
12 உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என் பகைவரை அழித்துவிடும்;
என் எதிரிகள் அனைவரையும் ஒழித்துவிடும்;
ஏனெனில் நான் உமது அடியவன்.