சங்கீதம் 142
தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.
நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;
நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன்.
அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்;
என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன்.
 
என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில்,
நீரே என் வழியை அறிகிறவர்;
நான் நடக்கும் பாதையில்
மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை;
என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை.
எனக்குப் புகலிடம் இல்லை;
என்னைக் கவனிக்க எவருமில்லை.
 
யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்;
“நீரே என் புகலிடம்,
வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன்.
 
என் கதறலுக்குச் செவிகொடும்;
நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;
என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;
ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
நான் உமது பெயரைத் துதிக்கும்படி,
என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்;
அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம்,
நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள்.