சங்கீதம் 141
தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடம் விரைந்து வாரும்;
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என் குரலைக் கேளும்.
என் மன்றாட்டு உமக்கு முன்பாகத் தூபத்தைப்போல் ஏற்றுக்கொள்ளப்படட்டும்;
என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.
 
யெகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்;
என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
தீமைகளைச் செய்யும் மனிதரோடு சேர்ந்து
கொடுமையான செயல்களில் பங்குகொள்ளும்படி
என் இருதயத்தைத் தீமையின் பக்கம் இழுப்புண்டுபோக விடாதேயும்;
அவர்களுடைய ருசியான பண்டங்களை நான் சாப்பிடவும் விடாதேயும்.
 
நீதிமான் என்னை அடிக்கட்டும், அந்த அடி தயவானது;
நீதிமான் என்னைக் கண்டிக்கட்டும், அது என் தலைக்கு எண்ணெயைப்போல் இருக்கும்.
என் தலை அதை புறக்கணிக்காது;
என் மன்றாட்டு எப்பொழுதும் தீயோரின் செய்கைகளுக்கு விரோதமாகவே இருக்கிறது.
 
அவர்களுடைய ஆளுநர்கள் செங்குத்தான பாறைகளிலிருந்து
கீழே தள்ளிவிடப்படுவார்கள்;
அப்பொழுது, என் வார்த்தைகள் உண்மையாக இருந்ததை
கொடியவர்கள் புரிந்துகொள்வார்கள்.
“ஒரு நபர் நிலத்தை உழுது கிளறுவதுபோல்,
எங்கள் எலும்புகள் பாதாளத்தின் வாசலில் சிதறடிக்கப்பட்டன”
என்று அவர்கள் சொல்வார்கள்.
 
ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே, என் கண்கள் உம்மையே நோக்குகின்றன;
நான் உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறேன், என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடாதேயும்.
தீயவர் எனக்கு வைத்த கண்ணிகளிலிருந்தும்,
அவர்களால் வைக்கப்பட்ட சுருக்குக் கயிறுகளிலிருந்தும் என்னைக் காத்துக்கொள்ளும்.
10 நான் அவற்றைப் பாதுகாப்பாய் கடக்க,
கொடியவர்கள் தங்கள் வலைகளிலேயே அகப்படட்டும்.