சங்கீதம் 140
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, தீய மனிதரிடமிருந்து என்னைத் தப்புவியும்;
வன்முறையாளர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
அவர்கள் தங்கள் இருதயங்களில் பொல்லாத திட்டங்களைத் தீட்டி,
நாள்தோறும் போரை மூட்டிவிடுகிறார்கள்.
அவர்கள் தங்கள் நாவுகளைப் பாம்பின் நாவுகளைப் போலக் கூர்மையாக்குகிறார்கள்;
அவர்கள் உதடுகளில் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.
 
யெகோவாவே, கொடியவர்களுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி,
வன்முறையாளர்களுக்கு என்னை விலக்கி இரட்சியும்;
அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
பெருமையுள்ள மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்;
அவர்கள் தங்கள் வலைகளின் கயிறுகளை விரித்து,
என் வழியெல்லாம் எனக்காகக் பொறிகளை வைத்திருக்கிறார்கள்.
 
யெகோவாவே, “நீரே என் இறைவன்” என்று நான் உம்மிடம் சொல்கிறேன்;
யெகோவாவே, இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
ஆண்டவராகிய யெகோவாவே, என் இரட்சிப்பின் பெலனே,
நீர் யுத்தநாளில் என் தலையை மறைத்துகொள்ளும்.
யெகோவாவே, கொடியவர்களின் ஆசைகள் நிறைவேற விடாதேயும்;
அவர்களுடைய திட்டங்களை வெற்றியடைய விடாதேயும்.
 
என்னைச் சூழ்ந்துள்ளவர்கள் பெருமையுடன் தங்கள் தலையை உயர்த்துகிறார்கள்;
அவர்கள் உதடுகளின் தீவினைகள் அவர்களை மூடும்.
10 எரியும் நெருப்புத் தழல்கள் அவர்கள்மேல் விழட்டும்;
அவர்கள் ஒருபோதும் எழுந்திருக்க முடியாதபடி நெருப்பிலும்,
சேற்றுக் குழிகளிலும் தள்ளப்படட்டும்.
11 அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்;
வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.
 
12 யெகோவா ஏழைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கிறவர் என்பதையும்,
எளியவர்களின் சார்பாக வழக்காடுபவர் என்பதையும் நான் அறிவேன்.
13 நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்;
நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.