சங்கீதம் 144
தாவீதின் சங்கீதம்.
என் கன்மலையாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,
அவர் என் கைகளை யுத்தத்திற்கும்,
என் விரல்களை போர்புரிவதற்கும் பயிற்றுவிக்கிறார்.
அவர் என் அன்பான இறைவன், என் கோட்டை,
என் அரண், என் மீட்பர்,
அவரே நான் தஞ்சம் அடைகிற என் கேடயம்,
நாடுகளை* அவர் எனக்குக் கீழ்படுத்துகிறார்.
 
யெகோவாவே, மனிதனைக் குறித்து நீர் அக்கறை கொள்வதற்கும்,
வெறும் மனிதர்களை நீர் நினைப்பதற்கும் அவர்கள் யார்?
மனிதன் ஒரு சுவாசத்தைப்போல் இருக்கிறான்;
அவன் நாட்கள் துரிதமாய் மறையும் நிழலைப்போல் இருக்கின்றன.
 
யெகோவாவே, உமது வானங்களைப் பிரித்துக் கீழே வாரும்;
மலைகள் புகையும்படியாக, அவைகளைத் தொடும்.
மின்னல்களை அனுப்பி, பகைவர்களைச் சிதறடியும்;
உமது அம்புகளை எய்து அவர்களை முறியடியும்.
உமது கரத்தை உயரத்திலிருந்து கீழே நீட்டும்;
பெருவெள்ளத்திலிருந்தும், பிறநாட்டினரின் கைகளிலிருந்தும்
என்னை விடுவித்துத் தப்புவியும்.
அவர்களின் வாய்கள் பொய்களினால் நிறைந்திருக்கின்றன;
அவர்களுடைய வலதுகைகள் வஞ்சனை உடையவைகளாய் இருக்கின்றன.
 
இறைவனே, நான் உமக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுவேன்;
பத்து நரம்பு வீணையினால் நான் உமக்கு இசை மீட்டுவேன்.
10 ஏனெனில் அரசர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவரும்
உமது அடியவனாகிய தாவீதை விடுவிப்பவரும் நீரே.
 
11 கொடிய வாளினின்று என்னை விடுவித்தருளும்;
பொய்பேசும் வாய்களையும்,
வஞ்சனையுள்ள வலது கைகளையுமுடைய
வேறுநாட்டைச் சேர்ந்தவரின் கைகளிலிருந்து என்னை விடுவித்துத் தப்புவியும்.
 
12 அப்பொழுது எங்கள் மகன்கள் தங்கள் வாலிபத்தில்
நன்றாய்ப் பராமரிக்கப்பட்ட செடிகளைப்போல் இருப்பார்கள்;
எங்கள் மகள்கள் அரண்மனையை அலங்கரிப்பதற்கென
செதுக்கப்பட்ட தூண்களைப்போல் இருப்பார்கள்.
13 எங்கள் களஞ்சியங்கள்
சகலவித விளைபொருட்களாலும் நிரப்பப்படும்;
எங்கள் நிலங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரக்கணக்கிலும்,
பதினாயிரக்கணக்கிலும் பெருகும்.
14 எங்கள் எருதுகள் பாரமான பொதிகளை இழுக்கும்;
எங்கள் நகரத்தின் சுவர்களில் ஒன்றும் உடைக்கப்படுவதில்லை,
கைதிகளாக யாரும் சிறைபிடிக்கப்படுவதில்லை;
எங்கள் வீதிகளில் துன்பத்தின் அழுகையும் கேட்கப்படுவதில்லை.
15 இவற்றை உண்மையாக அடைந்த மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்ட மக்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
* சங்கீதம் 144:2 144:2 நாடுகளை என பல கையெழுத்துப் பிரதிகளிலும், என் மக்கள் என எபிரெய மொழி பிரதிகளிலும் உள்ளது.