சங்கீதம் 130
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
யெகோவாவே, துயரத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
யெகோவாவே, என் குரலைக் கேளும்;
இரக்கத்திற்காக கூப்பிடும் எனது குரலை
உமது காதுகள் கவனமாய்க் கேட்கட்டும்.
 
யெகோவாவே, நீர் பாவங்களைப் பதிவுசெய்து வைத்திருப்பீரானால்,
யெகோவாவே, யார் உம்முன் நிற்கமுடியும்?
ஆனால், நாங்கள் பயபக்தியுடன் உங்களுக்கு சேவைசெய்ய
உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
 
நான் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன், என் ஆத்துமா காத்திருக்கிறது;
அவருடைய வார்த்தையிலேயே என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.
விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,
ஆம், விடியற்காலைக்காகக் காத்திருக்கும் காவற்காரரைப் பார்க்கிலும்,
என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது.
 
இஸ்ரயேலே, உன் நம்பிக்கையை யெகோவாவிலேயே இருப்பதாக;
ஏனெனில் யெகோவாவிடத்தில் உடன்படிக்கையின் அன்பும்,
அவரிடத்தில் முழுமையான மீட்பும் உண்டு.
அவர்தாமே இஸ்ரயேலரை
அவர்களின் எல்லாப் பாவங்களிலிருந்தும் மீட்பார்.