சங்கீதம் 127
சீயோன் மலை ஏறும்போது பாடும் சாலொமோனின் பாடல்.
யெகோவா வீட்டைக் கட்டவில்லையென்றால்,
அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;
யெகோவா நகரத்தின்மேல் கண்காணிப்பாய் இருக்கவில்லையென்றால்,
காவலர் அதைக் காவல் செய்வதும் வீண்.
நீங்கள் சாப்பிடும் உணவுக்காக அதிகாலையில் எழுந்து,
நித்திரையின்றி நீண்டநேரம் உழைப்பதும் வீண்;
ஏனெனில் அவர் தாம் நேசிக்கிறவர்களுக்கு
அவர்கள் தூங்கும்போதும்கூட தேவையைத் தருகிறார்.
 
பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் உரிமைச்சொத்து;
பிள்ளைகள் அவரிடமிருந்து கிடைக்கும் வெகுமதியே.
ஒருவன் தன் வாலிபப் பருவத்தில் பெற்றெடுக்கும் பிள்ளைகள்
போர்வீரனின் கைகளில் இருக்கும் அம்புகளைப்போல் இருக்கிறார்கள்.
இவ்வித அம்புகளால் தன் அம்புக்கூட்டை நிரப்பிய
மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்;
நீதிமன்றத்தில் தங்கள் பகைவரோடு வாதாடும்போது,
அவர்கள் வெட்கப்படமாட்டார்கள்.