சங்கீதம் 126
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது,
நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
எங்கள் வாய்கள் சிரிப்பினாலும்,
எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன.
அப்பொழுது, “யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்”
என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது.
யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்;
அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம்.
 
யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல,
எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும்.
கண்ணீருடன் விதைக்கிறவர்கள்,
மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள்.
விதைப்பதற்கான விதைகளை
அழுதுகொண்டு சுமந்து போகிறவன்,
மகிழ்ச்சியின் பாடல்களுடன்
கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.