சங்கீதம் 113
அல்லேலூயா,
 
யெகோவாவின் பணியாட்களே, துதியுங்கள்;
யெகோவாவினுடைய பெயரைத் துதியுங்கள்.
யெகோவாவின் பெயர் இப்பொழுதும்,
எப்பொழுதும் துதிக்கப்படட்டும்.
சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து அது மறையும் இடம்வரை
யெகோவாவினுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
 
யெகோவா எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்;
அவருடைய மகிமை வானங்களுக்கு மேலாக இருக்கிறது.
நம்முடைய இறைவனாகிய யெகோவாவைப்போல் யாருண்டு?
உன்னதத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அவரைப்போல் யார் உண்டு?
வானங்களையும் பூமியையும் பார்க்கும்படி
தம்மைத் தாழ்த்துகிற அவரைப்போல் யாருண்டு?
 
அவர் ஏழைகளைத் தூசியிலிருந்து உயர்த்துகிறார்,
எளியவர்களைச் சாம்பற் குவியலில் இருந்து தூக்கிவிடுகிறார்.
அவர் தமது மக்களைப் பிரபுக்களோடு அமரப்பண்ணுகிறார்.
அவர் பிள்ளைப்பேறற்ற பெண்ணை பிள்ளைகளைப் பெறும் மகிழ்ச்சியுள்ள தாயாக்கி,
அவளுடைய வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார்.
 
அல்லேலூயா.