சங்கீதம் 114
இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது,
யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது,
யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று;
இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று.
 
கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது;
யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது.
மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,
குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின.
 
கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்?
யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்?
மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,
குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்?
 
பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு,
யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு.
அவர் கற்பாறையைக் குளமாகவும்,
கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே.