சங்கீதம் 109
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
இறைவனே, நான் துதிக்கும் இறைவனே,
நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.
கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள்,
தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்;
பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.
அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்;
காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள்.
அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்,
நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன்.
அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்;
என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள்.
 
என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்;
அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக.
அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்;
அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக.
அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக;
அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.
அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும்,
அவன் மனைவி விதவையாகட்டும்.
10 அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்;
அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக.
11 கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக;
அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக.
12 ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும்,
அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக.
13 அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக;
அவன்* பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக.
14 அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக;
அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக.
15 ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே
யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்;
அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும்.
 
16 ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை;
மாறாக ஏழைகளையும், எளியவர்களையும்,
உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான்.
17 சாபம் இடுவதையே அவன் விரும்பினான்;
அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக;
ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை,
ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக.
18 அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்;
அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும்,
அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது.
19 சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக;
அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக.
20 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும்,
என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும்
இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக.
 
21 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே,
நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்;
உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும்.
22 ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்,
என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது.
23 நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்;
ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன்.
24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன;
என் உடல் மெலிந்து போயிருக்கிறது.
25 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்;
அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள்.
 
26 யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்;
உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.
27 யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும்,
நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும்.
28 அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்;
அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்;
ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன்.
29 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்;
ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள்.
 
30 நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்;
பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.
31 ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்;
அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து
அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.
* சங்கீதம் 109:13 109:13 அவன் அல்லது அவர்களுடைய