சங்கீதம் 86
தாவீதின் மன்றாட்டு.
யெகோவாவே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்,
ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்.
நான் உமக்கு உண்மையாயிருப்பதால் என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்;
உம்மில் நம்பிக்கை வைத்திருக்கும் உமது அடியேனைக் காப்பாற்றும்.
நீரே என் இறைவன்; என்மேல் இரக்கமாய் இரும், யெகோவாவே,
நான் நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
யெகோவாவே உமது அடியேனுக்கு மகிழ்ச்சியைத் தாரும்;
ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மேல் வைக்கிறேன்.
 
யெகோவாவே, நீர் மன்னிக்கிறவரும் நல்லவருமாய் இருக்கிறீர்;
உம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும் அன்பு மிகுந்தவராயும் இருக்கிறீர்.
யெகோவாவே என் மன்றாட்டுக்குச் செவிகொடும்;
இரக்கத்திற்கான என் கதறுதலைக் கேளும்.
என் துன்ப நாளிலே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
ஏனெனில் நீர் எனக்குப் பதில் கொடுப்பீர்.
 
யெகோவாவே, தெய்வங்களில் உம்மைப் போன்றவர் ஒருவரும் இல்லை;
உமது செயல்களை யாராலும் செய்யமுடியாது.
யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும்
உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்;
அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
10 நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்;
நீர் ஒருவரே இறைவன்.
 
11 யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்;
அதினால் நான் உமது உண்மையைச் சார்ந்திருப்பேன்;
நான் உமது பெயரில் பயந்து நடக்கும்படி
ஒரே சிந்தையுள்ள இருதயத்தை எனக்குத் தாரும்.
12 என் இறைவனாகிய யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;
உமது பெயரை என்றென்றும் மகிமைப்படுத்துவேன்.
13 நீர் என்மீது கொண்டிருக்கும் அன்பு பெரியது;
நீர் என்னை ஆழங்களிலிருந்தும்
பாதாளத்திலிருந்தும் விடுவித்தீர்.
 
14 இறைவனே, அகங்காரிகள் என்னைத் தாக்குகிறார்கள்;
கொடூரமான கூட்டத்தார் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர்,
அவர்கள் உம்மை மதிக்காதவர்கள்.
15 ஆனாலும் யெகோவாவே, நீரோ கருணையும் கிருபையுமுள்ள இறைவனாய் இருக்கிறீர்;
கோபப்படுவதில் தாமதிப்பவராயும், அன்பும் உண்மையும் நிறைந்தவராயும் இருக்கிறீர்.
16 என் பக்கமாய்த் திரும்பி என்மேல் இரக்கமாயிரும்;
உமது அடியேனுக்கு உமது பெலத்தைக் காண்பியும்;
என்னைக் காப்பாற்றும்,
ஏனெனில் என் தாயைப்போலவே நானும் உமக்கு சேவை செய்கிறேன்.
17 என் பகைவர் கண்டு வெட்கப்படும்படியாக,
உமது நன்மைக்கான ஓர் அடையாளத்தை எனக்குத் தாரும்;
ஏனெனில் யெகோவாவே, நீர் எனக்கு உதவிசெய்து, என்னைத் தேற்றியிருக்கிறீர்.