சங்கீதம் 85
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட கோராகின் மகன்களின் சங்கீதம்.
யெகோவாவே, நீர் உமது நாட்டுக்குத் தயவு காட்டினீர்;
யாக்கோபின் மக்கள் இழந்த நல்ல நிலையை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்தீர்.
நீர் உமது மக்களின் அநியாயத்தை மன்னித்து,
அவர்களுடைய பாவங்களையெல்லாம் மூடிவிட்டீர்.
நீர் உமது கடுங்கோபத்தையெல்லாம் விலக்கிவிட்டு,
உமது பெருங்கோபத்திலிருந்தும் திரும்பினீர்.
 
எங்கள் இரட்சகராகிய இறைவனே, மறுபடியும் எங்களைப் புதுப்பியும்;
எங்கள் மேலுள்ள உமது கோபத்தை அகற்றும்.
நீர் எங்களுடன் என்றென்றும் கோபமாய் இருப்பீரோ?
உமது கோபத்தைத் தலைமுறைகள்தோறும் நீடிக்கச் செய்வீரோ?
உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி
நீர் எங்களை மீண்டும் உயிர்ப்பிக்கமாட்டீரோ?
யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பை எங்களுக்குக் காண்பித்து,
உமது இரட்சிப்பை எங்களுக்குத் தாரும்.
 
யெகோவாவாகிய இறைவன் சொல்வதை நான் கேட்பேன்;
அவர் தமது மக்களுக்கும் தமது பரிசுத்தவான்களுக்கும் சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறார்;
ஆனால் அவர்கள் மதியீனத்துக்குத் திரும்பாதிருக்கட்டும்.
அவருக்குப் பயந்து நடப்பவர்களுக்கு,
அவருடைய இரட்சிப்பு நிச்சயமாகவே சமீபமாய் இருப்பதால்,
அவருடைய மகிமையும் நமது நாட்டில் தங்கியிருக்கும்.
 
10 அன்பும் உண்மையும் ஒன்றாய்ச் சந்திக்கின்றன;
நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தம் செய்கின்றன.
11 உண்மை பூமியிலிருந்து முளைத்தெழும்புகிறது,
நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கிறது.
12 யெகோவா உண்மையாகவே நன்மையானதைத் தருவார்;
நம்முடைய நாடும் அதின் விளைச்சலைக் கொடுக்கும்.
13 நீதி அவருக்கு முன்சென்று,
அவருடைய காலடிகளுக்காக வழியை ஆயத்தப்படுத்துகிறது.