சங்கீதம் 77
பாடகர் குழுத் தலைவன் எதுத்தூனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம்.
நான் உதவிக்காக இறைவனை நோக்கி அழுதேன்;
எனக்குச் செவிகொடுக்கும்படியாக நான் இறைவனை நோக்கி அழுதேன்.
நான் துன்பத்தில் இருந்தபோது ஆண்டவரைத் தேடினேன்;
இரவில் என் கைகளைத் தளராமல் உயர்த்தினேன்,
என் ஆத்துமாவோ ஆறுதலடைய மறுத்தது.
 
இறைவனே, உம்மை நான் நினைவுகூர்ந்தேன், நான் புலம்பினேன்;
நான் தியானித்தேன், என் ஆவியோ சோர்ந்துபோயிற்று.
நீர் என் கண்களை மூடாதபடி தடுத்தீர்;
நான் பேசமுடியாதபடி மிகவும் கஷ்டப்பட்டேன்.
முந்தின நாட்களையும்,
கடந்துபோன வருடங்களைப்பற்றியும் நான் நினைத்தேன்;
நான் இரவில் என் பாடல்களை நினைவுகூர்ந்தேன்.
என் இருதயம் தியானித்தது, என் ஆவியோ இப்படி விசாரணை செய்தது:
 
“யெகோவா என்றென்றும் புறக்கணிப்பாரோ?
அவர் மீண்டும் ஒருபோதும் தயவு காண்பிக்கமாட்டாரோ?
அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ?
அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ?
இறைவன் தயைசெய்ய மறந்துவிட்டாரோ?
அவர் தமது கோபத்தில் இரக்கங்காட்ட மறுத்துவிட்டாரோ?”
 
10 அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம்,
எனக்காக செயலாற்றுகிறது,
11 யெகோவாவின் செயல்களை நான் நினைவுகூருவேன்;
ஆம், முற்காலத்தில் நீர் செய்த அற்புதங்களை நான் நினைவிற்கொள்வேன்.
12 உமது செய்கைகளையெல்லாம் நான் தியானிப்பேன்;
உமது வல்லமையான செயல்களை நான் சிந்திப்பேன்” என்றேன்.
 
13 இறைவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை;
நம்முடைய இறைவனைப்போல் பெரிய தெய்வம் யார்?
14 அற்புதங்களைச் செய்கிற இறைவன் நீரே;
நீர் மக்கள் மத்தியில் உமது வல்லமையை வெளிப்படுத்துகிறீர்.
15 உமது வல்லமையுள்ள புயத்தினால்
யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் சந்ததியான உமது மக்களை நீர் மீட்டுக்கொண்டீர்.
 
16 இறைவனே, சமுத்திரம் உம்மைக் கண்டது,
சமுத்திரம் உம்மைக் கண்டு தத்தளித்தது;
மகா ஆழங்களும் நடுங்கின.
17 மேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன,
ஆகாயங்கள் முழங்கி அதிர்ந்தன;
உமது அம்புகள் அங்கும் இங்கும் மின்னிப் பாய்ந்தன.
18 உமது இடியொலி சுழற்காற்றில் கேட்டது,
உமது மின்னல் உலகத்திற்கு வெளிச்சம் கொடுத்தது;
பூமி நடுங்கி அதிர்ந்தது.
19 உமது பாதை கடலிலும்,
உமது வழி பெருவெள்ளத்திலும் இருந்தது;
ஆனாலும் உமது அடிச்சுவடுகள் காணப்படவில்லை.
 
20 மோசே, ஆரோன் என்பவர்களுடைய கையினால்
நீர் உமது மக்களை ஒரு மந்தையைப்போல் நடத்தினீர்.