சங்கீதம் 76
கம்பியிசைக் கருவிகளுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய ஆசாபின் சங்கீதம்.
யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்;
இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது.
அவருடைய கூடாரம் சாலேமில்* இருக்கிறது;
அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது.
அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும்,
கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.
 
நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்;
வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர்.
வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு,
அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்;
போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை
உயர்த்த முடியாமலிருக்கிறான்.
யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில்
குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
 
நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்;
நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்?
நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்;
பூமி பயந்து அமைதியாய் இருந்தது.
இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக
நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர்.
10 நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம்
உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது;
உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.
 
11 உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து,
அவைகளை நிறைவேற்றுங்கள்.
அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான
அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும்.
12 அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்;
பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
* சங்கீதம் 76:2 76:2 சாலேமில் என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் எருசலேம்.