சங்கீதம் 71
யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்;
என்னை ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்.
உமது நீதியின் நிமித்தம் என்னை விடுவித்து, என்னை மீட்டுக்கொள்ளும்;
உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும்.
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க
என் புகலிடமான கன்மலையாய் இரும்;
நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால்,
என்னைக் காப்பாற்றக் கட்டளையிடும்.
என் இறைவனே, என்னைக் கொடியவன் கையிலிருந்து விடுவியும்;
தீமையும் கொடூரமும் நிறைந்த மனிதரின் பிடியிலிருந்தும் விடுவியும்.
 
ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என் எதிர்பார்ப்பு;
என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
நான் பிறந்ததுமுதல் உம்மைச் சார்ந்திருக்கிறேன்;
என் தாயின் கருப்பையிலிருந்து என்னைப் பராமரித்தவர் நீரே;
நான் என்றென்றும் உம்மைத் துதிப்பேன்.
நான் அநேகருக்கு வியப்புக்குரிய எடுத்துக்காட்டாய் இருக்கிறேன்;
நீரே என் பலமுள்ள புகலிடம்.
நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து,
என் வாய் உமது துதியினால் நிறைந்திருக்கிறது.
 
நான் முதியவனாகும்போது, என்னைத் தள்ளிவிடாதேயும்;
என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாதேயும்.
10 ஏனெனில் என் பகைவர் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்;
என்னைக் கொலைசெய்யக் காத்திருக்கிறவர்கள் ஒன்றுகூடி சதி செய்கிறார்கள்.
11 அவர்கள், “இறைவன் அவனைக் கைவிட்டுவிட்டார்;
அவனைப் பின்தொடர்ந்து பிடியுங்கள்;
அவனை விடுவிக்கிறவர் யாருமே இல்லை” என்கிறார்கள்.
12 இறைவனே, என்னைவிட்டுத் தூரமாகாதேயும்;
என் இறைவனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்;
13 என்மீது குற்றம் சுமத்துகிறவர்கள் வெட்கத்தால் அழிந்துபோவார்களாக;
எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள்,
ஏளனத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக.
 
14 நானோ எப்பொழுதுமே எதிர்பார்ப்புடனே இருப்பேன்;
நான் மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
 
15 எப்பொழுதும் என் வாய் உமது நீதியைப்பற்றிச் சொல்லும்;
உமது இரட்சிப்பின் செயல்களை நான் அறியாதிருந்த போதிலும்,
அதைப்பற்றி நாள்தோறும் என் வாய் சொல்லும்.
16 ஆண்டவராகிய யெகோவாவே, நான் உமது வல்லமையான செயல்களை எடுத்துச்சொல்வேன்;
நான் உம்முடைய நீதியை மட்டுமே பிரசித்தம் பண்ணுவேன்.
17 இறைவனே, என் இளமையிலிருந்தே நீர் எனக்குப் போதித்திருக்கிறீர்;
நான் உமது அற்புதமான செயல்களை இன்றுவரை அறிவித்து வருகிறேன்.
18 இறைவனே, வரப்போகும் எல்லோருக்கும் அடுத்த தலைமுறைக்கும்
உமது ஆற்றலையும் உம்முடைய வல்லமையையும் அறிவிக்குமளவும்
நான் முதிர்வயதாகும்போதும் என் தலைமுடி நரைக்கும்போதும்,
என்னைக் கைவிடாதேயும்.
 
19 பெரிய காரியங்களைச் செய்த இறைவனே,
உமது நீதி ஆகாயங்களை எட்டுகிறது;
இறைவனே, உம்மைப்போல் யாருண்டு?
20 நீர் என்னை அநேக கசப்பான
துன்பங்களையும் காணச் செய்திருந்தாலும்
என் வாழ்வை மீண்டும் புதுப்பிப்பீர்;
பூமியின் ஆழங்களில் இருந்து
நீர் என்னை மறுபடியும் மேலே கொண்டுவருவீர்.
21 நீர் என் மேன்மையைப் பெருகப்பண்ணி,
மீண்டும் என்னைத் தேற்றுவீர்.
 
22 என் இறைவனே, நான் உமது உண்மையைப் பற்றி
வீணை இசைத்து உம்மைத் துதிப்பேன்;
இஸ்ரயேலின் பரிசுத்தரே,
யாழ் இசைத்து நான் உமக்குத் துதி பாடுவேன்.
23 உம்மால் மீட்கப்பட்ட நான்
உமக்குத் துதிபாடும்போது,
என் உதடுகளும் கம்பீரித்து மகிழும்.
24 என் நாவு நாள்முழுவதும்
உமது நீதியின் செயல்களைப் பற்றிச் சொல்லும்;
ஏனெனில் எனக்குத் தீங்குசெய்ய விரும்பியவர்கள்
வெட்கத்திற்கும் கலக்கத்திற்கும் உள்ளானார்கள்.