சங்கீதம் 70
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்;
யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
 
என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள்
வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக;
எனது அழிவை விரும்புகிற யாவரும்
அவமானமடைந்து திரும்புவார்களாக.
என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள்,
அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக.
ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும்
உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக;
உமது இரட்சிப்பை விரும்புவோர்,
“இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.
 
நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்;
இறைவனே, என்னிடம் விரைந்து வாரும்.
நீரே என் துணை, நீரே என் மீட்பர்;
யெகோவாவே, தாமதியாதேயும்.