சங்கீதம் 59
தாவீதின் வீட்டின் அருகே காத்திருந்து அவனை கொல்வதற்கு சவுல் ஆட்களை அனுப்பியபோது, “அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கத் தாவீது பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் சங்கீதம்.
இறைவனே, பகைவர்களிடமிருந்து என்னை விடுவியும்;
எனக்கெதிராக எழும்புகிறவர்களிடமிருந்து என்னைக் காத்துக்கொள்ளும்.
தீமை செய்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;
என்னைக் கொல்ல முயற்சிக்கும் வெறியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
 
அவர்கள் எப்படி எனக்காகப் பதுங்கிக் காத்திருக்கிறார்கள் என்று பாரும்!
யெகோவாவே, நான் குற்றமோ பாவமோ செய்யாதிருக்க,
சிலர் பயங்கரமானச் சதியை எனக்கெதிராகச் செய்கிறார்கள்.
நான் ஒரு தவறும் செய்யவில்லை;
இருந்தும் என்னைத் தாக்குவதற்கு அவர்கள் ஆயத்தமாயிருக்கிறார்கள்.
எனக்கு உதவிசெய்ய எழுந்தருளும்; எனது நிலைமையைப் பாரும்!
சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,
இஸ்ரயேலின் இறைவனே,
இந்த எல்லா மக்களையும் தண்டிப்பதற்காக எழுந்தருளும்;
கொடுமையான துரோகிகளுக்கு இரக்கம் காட்டாதிரும்.
 
மாலையிலே அவர்கள்
நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்;
நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
அவர்கள் வாய் திறந்து என்னத்தைப் பேசுகிறார்கள் என்று பாரும்;
அவர்கள் தங்கள் உதடுகளிலிருந்து வரும் வார்த்தைகள் வாள் போன்றவை,
அவர்கள், “நாங்கள் சொல்வதை கேட்கிறவர் யார்?” என்று கூறுகிறார்கள்.
ஆனால் யெகோவாவே, நீரோ அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறீர்;
அவர்களைப் பார்த்து ஏளனம் செய்கிறீர்.
 
நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்;
இறைவனே, நீரே என் கோட்டை,
10 நான் சார்ந்திருக்கும் இறைவன்.
 
தமது உடன்படிக்கையின் அன்பினால் என்னைச் சந்திப்பார்.
என் பகைவர்களின் வீழ்ச்சியை பார்க்கும்படி செய்வார்.
11 எங்கள் கேடயமான யெகோவாவே, அவர்களை ஒரேயடியாய் அழிக்கவேண்டாம்;
அப்படியானால், என் மக்கள் அதைப்பற்றி மறந்துவிடுவார்கள்.
உமது வல்லமையினால் நிலையற்றவர்களாக்கி,
அவர்களைத் தாழ்த்திவிடும்.
12 அவர்களுடைய உதடுகளின் பேச்சு,
அவர்களுடைய வாயின் பாவமாயிருக்கிறது;
அவர்கள் சொல்லும் சாபமும் பொய்யும்,
அவர்களை பெருமையில் சிக்கவைப்பதாக.
13 உமது கோபத்தால் அவர்களை தண்டித்துவிடும்;
அவர்கள் இல்லாமல் போகும்வரை அவர்களை தண்டித்துவிடும்.
அப்பொழுது இறைவன்,
யாக்கோபின்மேல் ஆளுகை செய்கிறார் என்று
பூமியின் எல்லைகள்வரை எல்லோரும் அறிந்துகொள்வார்கள்.
 
14 மாலையிலே அவர்கள்
நாய்களைப்போல் குரைத்துக்கொண்டு திரும்பிவருகிறார்கள்;
நகரத்தைச் சுற்றித் திரிகிறார்கள்.
15 உணவுக்காக அவர்கள் அலைந்து திரிகிறார்கள்;
திருப்தியடையாவிட்டால் முறுமுறுத்துக் கொண்டே இரவைக் கடக்கிறார்கள்.
16 ஆனால் நானோ, உமது பெலனைக் குறித்துப் பாடுவேன்;
காலையிலே உமது உடன்படிக்கையின் அன்பை குறித்துப் பாடுவேன்;
ஏனெனில் நீரே எனது கோட்டையும்
துன்பகாலங்களில் என் புகலிடமுமாய் இருக்கிறீர்.
 
17 என் பெலனே, நான் உமக்குத் துதி பாடுவேன்;
இறைவனே, நீரே என் கோட்டையும்,
என் அன்பான இறைவனுமாயிருக்கிறீர்.