சங்கீதம் 58
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.
ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ?
மனிதர் மத்தியில் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறீர்களோ?
இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்;
உங்கள் கைகள் பூமியின்மேல் வன்முறையைப் பரப்புகிறது.
 
கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்;
அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள்.
அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது;
அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள்.
இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும்
அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது.
 
இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்;
யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும்.
ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்;
அவர்கள் தங்கள் வில்லை இழுக்கும்போது, அவர்களுடைய அம்புகள் முறிந்து போகட்டும்.
நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்;
ஒரு பெண்ணின் வயிற்றில் சிதைந்த கருவைப்போல,
சூரியனை அவர்கள் பார்க்காமல் போகட்டும்.
 
முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே,
பச்சையானதையும் எரிந்துபோனதையும் சுழற்காற்று வாரியதைப்போல
கொடியவர்களை வாரிக்கொள்ளும்.
10 அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்;
கொடியவர்களின் உயிர் நீதிமான்களின் பாதபடியில் இருக்கும்.
11 அப்பொழுது மனிதர்,
“நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும்
பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு” என்றும் சொல்வார்கள்.