சங்கீதம் 13
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்?
எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ?
நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்?
எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்?
எவ்வளவு காலத்திற்கு அனுதினமும் என் இருதயத்தில் துக்கத்தோடு இருக்கவேண்டும்?
என் பகைவன் எவ்வளவு காலத்திற்கு என்னை வெற்றிகொள்வான்?
 
என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும்.
என் கண்களுக்கு ஒளியைத் தாரும்; அல்லது நான் மரணத்தில் உறங்கி விடுவேன்.
அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்;
நான் விழும்போது என் எதிரிகளும் மகிழ்வார்கள்.
 
ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்;
என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது.
யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார்,
அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன்.