சங்கீதம் 121
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன்.
எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே,
எனக்கு உதவி வரும்.
 
அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்;
உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.
இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர்,
உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
 
யெகோவா உன்னைக் காக்கிறவர்;
யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
பகலில் சூரியனோ,
இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.
 
யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்;
அவர் உன் வாழ்வைக் காப்பார்.
யெகோவா உன் போக்கையும் வரத்தையும்
இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.