சங்கீதம் 120
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.
யெகோவாவே,
பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும்,
வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.
 
வஞ்சக நாவே,
இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன?
அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும்,
சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.
 
ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே
வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே;
கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!
சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில்
நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
நான் சமாதானத்தை நாடுகிறேன்;
அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.