சங்கீதம் 101
தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;
உமக்கே நான் துதி பாடுவேன்.
நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்;
நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்?
 
நான் குற்றமற்ற இருதயத்துடன்
என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன்.
தீங்கான செயல்களை
நான் என் கண்முன் வைக்கமாட்டேன்.
 
உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்;
அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.
வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்;
நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.
 
தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை
நான் தண்டிப்பேன்;
கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை
நான் சகிக்கமாட்டேன்.
 
நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும்,
அவர்கள் என்னோடு வாழ்வார்கள்;
குற்றமற்றவனாய் நடப்பவர்களே
எனக்கு ஊழியம் செய்வார்கள்.
 
வஞ்சனை செய்யும் யாரும்
என் வீட்டில் வாழமாட்டார்கள்;
பொய்ப் பேசுபவர் யாரும்
என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
 
நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும்
காலைதோறும் தண்டிப்பேன்;
தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும்
யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.