சங்கீதம் 74
மஸ்கீல் என்னும் ஆசாபின் சங்கீதம்.
இறைவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் புறக்கணித்துவிட்டீர்?
உமது கோபம் உமது மேய்ச்சல் நிலத்தின் செம்மறியாடுகளுக்கு விரோதமாக ஏன் புகைகிறது?
நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்துக்கொண்ட உமது மக்களையும்,
நீர் மீட்டுக்கொண்ட உமது உரிமைச்சொத்தான கோத்திரத்தையும் நினைவிற்கொள்ளும்;
உமது தங்குமிடமான சீயோன் மலையையும் நினைவிற்கொள்ளும்.
என்றென்றும் பாழாய்க்கிடக்கும் இடங்களைப் பாரும்;
எதிரி பரிசுத்த இடத்திற்குள் அனைத்தையும் பாழாக்கிவிட்டான்.
 
நீர் எங்களைச் சந்தித்த இடத்திலே, உமது எதிரிகள் கர்ஜித்தார்கள்;
அவர்கள் தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டினார்கள்.
அடர்ந்த காட்டில் மரங்களை வெட்டுவதற்கு
கோடாரிகளைக் கையாளும் மனிதரைப்போல் அவர்கள் நடந்துகொண்டார்கள்.
அவர்கள் தங்கள் கோடாரிகளாலும்,
கைக்கோடரிகளாலும் சித்திரவேலைகள் எல்லாவற்றையும் அழித்தார்கள்.
அவர்கள் உமது பரிசுத்த இடத்தை எரித்துத் தரைமட்டமாக்கினார்கள்;
அவர்கள் உமது பெயருக்குரிய தங்குமிடத்தை அசுத்தமாக்கினார்கள்.
அவர்கள் தங்கள் இருதயங்களில்,
“நாங்கள் அவர்களை அடியோடு அழித்துவிடுவோம்!” என்றார்கள்;
நாட்டில் இறைவனை வழிபட்ட எல்லா இடங்களையும் அவர்கள் எரித்துப்போட்டார்கள்.
 
எங்களுக்கு நீர் செய்த அற்புத அடையாளங்கள் எதையும் நாங்கள் காணவில்லை;
இறைவாக்கினரும் இல்லை;
இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதும் எங்களில் யாருக்கும் தெரியாது.
10 இறைவனே, பகைவன் எவ்வளவு காலத்துக்கு உம்மை நிந்திப்பான்?
எதிரி உமது பெயரை என்றென்றும் உதறித் தள்ளிவிடுவானோ?
11 நீர் ஏன் உமது கரத்தை, உமது வலது கரத்தை மடக்கிக் கொள்கிறீர்?
மறைந்திருக்கும் உமது கையை நீட்டி அவர்களை அழித்துப்போடும்.
 
12 ஆனால் பூர்வகாலத்திலிருந்து இறைவனே நீரே என் அரசர்;
அவர் பூமியின்மேல் இரட்சிப்பைச் செய்துவருகிறார்.
 
13 உமது வல்லமையினால் கடலை இரண்டாகப் பிளந்தவர் நீரே;
நீரே கடலிலுள்ள இராட்சத விலங்கின் தலைகளையும் உடைத்தீர்.
14 லிவியாதான் தலைகளை நசுக்கி,
அதைப் பாலைவனப் பிராணிகளுக்கு உணவாகக் கொடுத்தவரும் நீரே.
15 ஊற்றுகளையும் நீரோடைகளையும் திறந்தவர் நீரே;
எப்பொழுதும் நிரம்பி வழிந்தோடும் ஆறுகளை வற்றப் பண்ணினவரும் நீரே.
16 பகல் உம்முடையது, இரவும் உம்முடையதே;
சூரியனையும் சந்திரனையும் நிலைப்படுத்தியவர் நீரே.
17 பூமியின் சகல எல்லைகளையும் அமைத்தவர் நீரே;
நீரே கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் ஏற்படுத்தினீர்.
 
18 யெகோவாவே, பகைவன் எவ்வளவாய் உம்மை ஏளனம் செய்தான் என்பதையும்,
மூடர்கள் உமது பெயரை எப்படி நிந்தித்தார்கள் என்பதையும் நினைவிற்கொள்ளும்.
19 உமது புறாவின் உயிரை காட்டு மிருகங்களுக்கு ஒப்புக்கொடாதிரும்;
துன்புறுத்தப்பட்ட உமது மக்களின் வாழ்வை என்றென்றும் மறவாதிரும்.
20 உமது உடன்படிக்கையை நினைவிற்கொள்ளும்;
ஏனெனில் வன்முறையின் இருப்பிடங்கள் நாட்டின் இருண்ட பகுதிகளை நிரப்புகின்றன.
21 ஒடுக்கப்பட்டவர்கள் அவமானத்துடன் பின்னடைய விடாதிரும்;
ஏழைகளும் எளியவர்களும் உமது பெயரைத் துதிப்பார்களாக.
22 இறைவனே, எழுந்தருளும்; உமது சார்பாக நீரே வாதாடும்;
நாள்தோறும் மூடர்கள் உம்மை எவ்வளவாய் நிந்திக்கிறார்கள் என்பதை நினைவிற்கொள்ளும்.
23 உமது விரோதிகளின் கூக்குரலையும்,
தொடர்ந்தெழும் உமது பகைவரின் ஆரவாரத்தையும் அசட்டை பண்ணாதிரும்.