சங்கீதம் 66
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு.
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்
இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!
அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;
அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.
இறைவனிடம் சொல்லுங்கள், “உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!
உமது வல்லமை பெரிதானது;
அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;
அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள்,
அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்.”
 
இறைவன் செய்துள்ளவற்றை வந்து பாருங்கள்;
மனிதரிடையே அவர் செய்யும் செயல்கள் எவ்வளவு பயப்படத்தக்கவை.
அவர் கடலை வறண்ட நிலமாக மாற்றினார்;
மக்கள் கால்நடையாய் தண்ணீரைக் கடந்தார்கள்;
வாருங்கள், அவரில் களிகூருவோம்.
அவர் தமது வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்;
அவருடைய கண்கள் நாடுகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றன;
கலகக்காரர் அவருக்கு எதிராக எழும்பாதிருக்கட்டும்.
 
எல்லா மக்களும், நம்முடைய இறைவனைத் துதியுங்கள்;
அவரைத் துதிக்கும் சத்தம் கேட்கப்படுவதாக.
அவர் நம்முடைய உயிர்களைப் பாதுகாத்திருக்கிறார்;
நம்முடைய பாதங்கள் சறுக்கிவிடாதபடி காத்துக்கொள்கிறார்.
10 இறைவனே, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்;
வெள்ளியைப்போல் எங்களைப் புடமிட்டுச் சுத்திகரித்தீர்.
11 எங்களைச் சிறைபிடித்து,
எங்கள் முதுகுகளில் பாரங்களை சுமத்தினீர்.
12 மனிதரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகச் செய்தீர்;
நாங்கள் நெருப்பையும் தண்ணீரையும் கடந்துசென்றோம்,
ஆனால் நீர் எங்களைச் செழிப்பான இடத்திற்கு கொண்டுவந்தீர்.
 
13 நான் தகன காணிக்கைகளுடன் உமது ஆலயத்திற்கு வருவேன்;
எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
14 நான் துன்பத்திலிருந்தபோது
என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொன்ன நேர்த்திக் கடன்களைச் செய்வேன்.
15 நான் கொழுத்த மிருகங்களையும்
செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன்;
நான் எருதுகளையும் வெள்ளாடுகளையும் காணிக்கையாகச் செலுத்துவேன்.
 
16 இறைவனுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து, செவிகொடுங்கள்;
அவர் எனக்குச் செய்தவற்றை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
17 நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
அவருடைய துதி என் நாவில் இருந்தது.
18 என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால்,
யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;
19 இறைவனோ நிச்சயமாய் எனக்குச் செவிகொடுத்து,
என் மன்றாட்டின் குரலைக் கேட்டார்.
20 என் மன்றாட்டைத் தள்ளிவிடாமல்,
என்னிடமிருந்து தமது உடன்படிக்கையின் அன்பை விலக்காமலிருந்த
இறைவனுக்குத் துதி உண்டாகட்டும்.