சங்கீதம் 53
மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.
மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான்.
அவர்கள் சீர்கெட்டவர்கள்;
அவர்களுடைய வழிகள் இழிவானவை;
அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.
 
இறைவன் பரலோகத்திலிருந்து
மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,
அவர்களில் விவேகமுள்ளவனாவது
இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.
எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;
நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,
ஒருவனாகிலும் இல்லை.
 
தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?
 
மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;
அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை.
பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே,
அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள்.
உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்;
இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
 
சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!
இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!