சங்கீதம் 49
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள்,
இந்த உலகத்தில் வாழ்கிறவர்களே,
தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வந்தரே, ஏழைகளே,
எல்லோரும் ஒருமித்துச் செவிகொடுங்கள்:
என் வாய் ஞானமுள்ள வார்த்தைகளைப் பேசும்;
என் இருதயத்திலிருந்து வரும் தியானம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.
நான் பழமொழிக்கு என் செவியைச் சாய்ப்பேன்;
விடுகதையை யாழ் இசைத்து விவரிப்பேன்:
 
தீங்கு நாட்கள் வரும்போதும்,
கொடிய ஏமாற்றுக்காருடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளும்போதும்
நான் ஏன் பயப்படவேண்டும்?
அவர்கள் தங்கள் செல்வத்தில் நம்பிக்கை வைத்து,
தங்கள் மிகுதியான உடைமைகளில் பெருமை பாராட்டுகிறார்கள்.
ஒருவனாலும் இன்னொருவனுடைய உயிரை மீட்கமுடியாது;
அவனுக்கான மீட்பின் பதிலீட்டை இறைவனுக்குக் கொடுக்கவும் முடியாது.
ஏனெனில் உயிருக்கான மீட்பின் பதிலீடு விலையுயர்ந்தது;
எந்த விலை கொடுத்தும் மீட்கமுடியாது.
அவர்கள் அழிவைக் காணாமல்
என்றென்றும் வாழும்படி எப்படிப்பட்ட விலையும் கொடுக்க முடியாது.
10 ஞானிகள் சாவதையும்,
மூடரும் புத்தியற்றவர்களும் அழிவதையும் எல்லோராலும் காணமுடியும்;
அவர்கள் தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விட்டுச் செல்வதைக் காணலாம்.
11 தங்கள் பெயர்களையே அவர்கள் நிலங்களுக்கு வைத்தாலும்,
அவர்களுடைய கல்லறைகளே என்றென்றைக்கும் அவர்கள் வீடாகவும்
முடிவற்ற தலைமுறைகளுக்கு அவர்களுடைய தங்குமிடமாகவும் நிலைத்திருக்கும்.
 
12 ஆனாலும் மக்கள் நன்மதிப்பிலே நிலைத்திருக்கிறதில்லை;
அவர்கள் அழிந்துபோகும் மிருகங்களைப்போலவே இருக்கிறார்கள்.
 
13 தங்களிலேயே நம்பிக்கை வைக்கிறவர்களின் முடிவு இதுவே;
இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பின்பற்றுகிறவர்களின் நிலையும் அதுவே.
14 அவர்கள் செம்மறியாடுகளைப்போல சாவுக்கென்றே நியமிக்கப்பட்டுள்ளார்கள்;
மரணம் அவர்களின் மேய்ப்பனாயிருக்கும்.
நீதிமான்கள் காலையில் அவர்களை ஆளுகை செய்வார்கள்;
அவர்கள் அரண்மனையில் நிலைத்திராமல்,
கல்லறை அவர்களுடைய உருவத்தை அழித்துவிடும்.
15 ஆனால், இறைவனோ என் உயிரைப் பாதாளத்திலிருந்து மீட்டுக்கொள்வார்;
அவர் நிச்சயமாக என்னைத் தம்மிடத்தில் ஏற்றுக்கொள்வார்.
16 பிறர் செல்வந்தர்களாகி,
அவர்கள் வீட்டின் செழிப்பு அதிகரிக்கும்போது, திடுக்கிடாதே;
17 ஏனெனில் அவர்கள் சாகும்போது, தம்முடன் ஒன்றையும் கொண்டுபோகமாட்டார்கள்;
அவர்களுடைய செழிப்பும் அவர்களைப் பின்தொடராது.
18 அவர்கள் உயிரோடிருந்தபோது,
தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று எண்ணினார்கள்.
அவர்கள் செழிப்படைந்து இருக்கும்போது மனிதர் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
19 ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே மரிப்பார்கள்;
வாழ்வின் ஒளியை இனி ஒருபோதும் காணமாட்டார்கள்.
 
20 செல்வந்தராயிருந்தும் அறிவு இல்லாதிருந்தால்
அவர்கள் அழிந்துபோகும் மிருகத்தைப் போல் இருக்கிறார்கள்.