சங்கீதம் 47
கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்;
மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.
 
உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர்,
அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.
அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்,
மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்.
இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை,
தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.
 
இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்;
யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்;
நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்.
ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்;
அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.
 
இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்;
அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
மக்களின் தலைவர்கள்,
ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள்.
ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்;
அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.