சங்கீதம் 24
தாவீதின் சங்கீதம்.
பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை,
உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.
ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி,
தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.
 
யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்?
அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?
சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும்
தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும்
பொய் சத்தியம் செய்யாதவனுமே.
 
அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்,
தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள்.
அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே,
யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே.
 
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;
மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
இந்த மகிமையின் அரசன் யார்?
அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா,
அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;
மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.
10 மகிமையின் அரசனான இவர் யார்?
அவர் சேனைகளின் யெகோவா;
அவரே மகிமையின் அரசன்.