சங்கீதம் 21
பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார்.
நீர் கொடுக்கும் வெற்றிகளில் அவருடைய மகிழ்ச்சி எவ்வளவு பெரிதாயிருக்கிறது.
 
அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்;
அவருடைய உதடுகளின் வேண்டுதலை நீர் புறக்கணிக்கவில்லை.
நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று,
சுத்தத் தங்கத்தினாலான மகுடத்தை நீர் அவர் தலையின்மேல் வைத்தீர்.
அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்;
அவர் என்றென்றும் வாழ, நீடித்த ஆயுளைக் கொடுத்தீர்.
நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது;
நீர் அவரை மகிமையாலும் மகத்துவத்தாலும் நிரப்பியிருக்கிறீர்.
நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்;
உமது சமுகத்தின் ஆனந்தத்தால், அவரை மகிழ்ச்சியாக்கினீர்.
ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்;
உன்னதமானவரின் உடன்படிக்கையின் அன்பினிமித்தம்
அவர் அசைக்கப்படமாட்டார்.
 
உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்;
உமது வலதுகரம் உம்முடைய எதிரிகளைப் பிடித்துக்கொள்ளும்.
நீர் வரும் நேரத்தில்
அவர்களை ஒரு நெருப்புச் சூளையைப்போல் ஆக்கிவிடுவீர்.
யெகோவா தமது கடுங்கோபத்தில் அவர்களை அழித்துவிடுவார்;
அவருடைய நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்.
10 நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர்,
அவர்களுடைய சந்ததிகளை மனுக்குலத்திலிருந்து அழிப்பீர்.
11 உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள்,
பொல்லாத சதித்திட்டங்களை வகுத்தார்கள்; ஆனாலும் அவர்களால் வெற்றி பெறமுடியாது.
12 நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது,
அவர்களை புறமுதுகு காட்டப்பண்ணுவீர்.
 
13 யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக;
நாங்கள் உமது வல்லமையைப் பாடித் துதிப்போம்.